ஜெனீவா : கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கும் நிலையில், அடுத்த பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 3 கோடி பேரை தனது ஆக்டோபஸ் பிடியில் வைத்திருக்கும் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் கொரோனாவை போல புதிய கொள்ளை நோய்கள் எதிர்காலத்தில் தாக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் எச்சரித்துள்ளார்.
இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கூறுகையில், இவற்றை சமாளிக்க உலக நாடுகள் பொது சுகாதாரத்தில் அதிகளவு முதலீடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். இது (கொரோனா) உலகின் கடைசி பெருந்தொற்று அல்ல. பெருந்தொற்றுகள் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறி இருப்பதை வரலாறு நமக்கு உணர்த்தி இருக்கிறது. அடுத்த பெருந்தொற்று உலகைத் தாக்கும்போது, அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும். என்றார்.
மருத்துவத் துறையில் முன்னேறி இருக்கும் நாடுகள் கூட அடிப்படை பொது சுகாதாரத்துறை கட்டமைப்பில் கவனம் செலுத்தாமல் புறக்கணித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொள்ளை நோய்களை சமாளிக்க அடிப்படையாக இருக்கும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதில், உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.