×

ஹைப்பர் சோனிக் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

புதுடெல்லி:உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ஏவுகணை என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்தது. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளனர். ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப அதிவேக ஏவுகணை சோதனை நேற்று ஒடிசாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆயுத உற்பத்தியில் அடுத்த கட்டத்தை எட்டும் முயற்சியாக, அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப சோதனை வாகனம் (எச்எஸ்டீடிவி) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து ஹைப்பர் சோனிக் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன. தற்போது அந்த வரிசையில் இந்தியா இணைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் எச்.எஸ்.டி.டி.வி. சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘வெற்றிகரமான ஹைபர்சோனிக் செயல்முறை வாகன பரிசோதனைக்காக இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகள் வடிவமைத்த ஸ்கிராம்ஜெட் என்ஜினால் ஒலியை விட 6 மடங்கு வேகத்தை ஏவுகணை பெற்றுள்ளது. இன்று, இந்த திறனை மிகச்சில நாடுகளே பெற்றிருக்கின்றன’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Tags : scientists , Hypersonic, high-speed missile, test, success, scientists, Prime Minister Modi, praise
× RELATED திருச்சி தேசிய அறிவியல் மாநாட்டிற்கு...