திருமலை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், யெட்டபாக்க கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நேற்று பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை ஒன்றை உயிருடன் புதைத்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற ஆடு மேய்ப்பவர்கள் சிலர் இதைப்பார்த்துள்ளனர். அவர்கள் அங்கு வருவதை பார்த்த மர்ம நபர்கள் குழந்தையை மண்ணில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது ஆண் குழந்தை பாதியளவு குழி தோண்டி மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர், குழந்தையை குழியில் இருந்து உயிருடன் மீட்டனர். கள்ளக்காதல், வீட்டிற்கு தெரியாமல் இருந்த உறவு போன்ற காரணங்களால் குழந்தை பிறந்த நிலையில், அதனை கைவிடுவதற்காக குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து யெட்டபாக்க போலீசார் வழக்குப்பதிந்து குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.