செய்யூர்: மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் வீடுகளின் மேல் அபாயகரமாக சென்ற மின்வயர்கள், தினகரன் செய்தி எதிரொலியால் தெரு வழியாக மாற்றி அமைக்கப்பட்டன. மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சி ஆதிதிரவிடர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகள் மீது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, குறைந்த அழுத்த மும்முனை மின்வயர்கள் சென்றன. இவை, வீட்டின் மாடியில் இருந்து கைக்கு எட்டும் உயரத்தில் ஆபத்தாகவும், அச்சுறுத்தும் வகையிலும் இருந்தன. இதனால், பெரும் விபத்து ஏற்படும் அச்சத்துடன் இப்பகுதி மக்கள் வசிக்கின்றனர்.
மேலும், இங்குள்ள குடிசை வீடுகள் மீது மின்வயர்கள் உரசியவாறு செல்வதால், மழை காலங்களிலும், பலத்த காற்று வீசும்போதும் மின் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி, தீப்பொறி ஏற்படுகிறது. இதையொட்டி, தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து கடந்த மாதம் 5ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள், மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து, அங்கிருந்த மின்கம்பங்கள் மற்றும் மின் வயர்களை மாற்றி அமைத்தனர். இதனால், நிம்மதியடைந்த மக்கள், செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்தனர்.
மீண்டும் அலட்சியம்
மின்வயர்களை மாற்றி அமைக்கும்போது, 5வது குறுக்கு தெருவில் ஒரு கம்பம் வலது புறத்திலும், மற்றொரு கம்பம் இடது புறத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள மின்வயர்கள், தெருவின் செல்கின்றன. இதனால், இப்பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போதும், திருவிழா காலங்களில் சுவாமி வீதி உலா நடக்கும்போதும் இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. இந்த கம்பங்களை முறையாக அமைப்பதில் அதிகாரிகள் மீண்டும் அலட்சியம் கட்டியிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.