திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அடுத்த விழுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி கன்னியம்மாள்(49). இவரது கணவர் முருகன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு மணிகண்டன்(25) என்ற மகனும் பொன்னி(24) என்ற மகளும் உள்ளனர். மணிகண்டன் கார் டிரைவராகவும், பொன்னி தனியார் கல்லூரியிலும் வேலை செய்து வருகின்றனர். இருவரும் சென்னையில் தங்கியுள்ளனர்.
இதனால் கன்னியம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வேலைக்கு செல்வதற்காக அவரை அழைக்க வந்துள்ளார். அப்போது, கன்னியம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் ரோஷணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன், திண்டிவனம் டிஎஸ்பி கணேசன் மற்றும் போலீசர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, சடலம் அருகே கத்தி, சட்டை, மதுபாட்டில் ஆகியவை கிடந்தது. இதையடுத்து விழுப்புரத்திலிருந்து மோப்பநாய் சாய்னா வரவழைக்கப்பட்டு ஓடவிடப்பட்டது. அது திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணக்கம்பட்டு வரை சுமார் 4 கிலோ மீட்டருக்கு ஓடியது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தொடர்ந்து கைரேகை நிபுணர் டாக்டர் சண்முகம் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தார்.
இதுதொடர்பாக ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.