×

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை என்று கல்வித்துறை அறிவிக்கும் வரை பணம் பறிக்கும் கும்பல்கள் திருந்தாது குழந்தைகளை டார்ச்சர் தான் செய்யும் : ராமதாஸ் கருத்து !!

சென்னை : ஆன்லைன் வகுப்புகள் மூலம் பணம் பறிக்கும் பள்ளி நிர்வாக கும்பல்கள் குழந்தைகளை டார்ச்சர் செய்து கொண்டு இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதையடுத்து மழலையர் பள்ளி முதல் கல்லூரி இறுதி ஆண்டு வரை, பயிலும் மாணவர்களுக்கு இணைய வழியாக பாடங்களை கல்வித்துறை நடத்தி வருகிறது.

அதே சமயம் ஆன்லைன் வகுப்புக்கு தேவையான மொபைல், இணைய வசதி மற்றும் தொலைக்காட்சி போன்ற எந்த வசதிகளும் இல்லாத ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது அரிதான ஒன்றாக மாறிப்போயுள்ளது. இதனால் செல்போன் இல்லாத மாணவர்கள் கல்வி பெற முடியாத வருத்தத்தில் மனமுடைந்து பலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். இதனிடையே அண்மையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி அல்லது வகுப்பு என்பது கட்டாயம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

நெஞ்சு பொறுக்குதில்லையே!பள்ளி வகுப்புகளை விரும்பும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளை விரும்புவதில்லை. ஆனாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் அந்தக் குழந்தைகளை டார்ச்சர் செய்து கொண்டு இருக்கின்றன பணம் பறிக்கும் பள்ளி நிர்வாக கும்பல்கள்! சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாகி விட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக் கல்வித்துறையோ, ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்வதாக அறிவிக்காமல், தனியார் பள்ளிகள் நோகாத வகையில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என்று பூசி மெழுகுகிறது. இது சரியா?

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை என்று கல்வித்துறை அறிவிக்கும் வரை பணம் பறிக்கும் கும்பல்கள் திருந்தாது. பள்ளிக்கல்வித்துறை அறிவிக்காத நிலையில் இந்த டார்ச்சருக்கு எவ்வாறு முடிவு கட்டுவது? எப்படி முடிவு கட்டுவது? எந்த வழியில் முடிவு கட்டுவது? ஆன்லைன் வகுப்பு டார்ச்சரைத் தொடரும் ஈவு இரக்கமற்ற, பணத்தாசை பிடித்த தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். சட்டத்தின் உதவியுடன், மக்களின் ஒத்துழைப்புடன், கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் விரைவில் அதை செய்து முடிப்போம்! எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Ramadas ,children ,Department of Education , Online Classes, Prohibition, Education, Extortion Gangs, Thiruntadu, Ramadas, Comment
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்