கண்ணமங்கலம்: சந்தவாசல் அடுத்த வெள்ளூர் ஊராட்சியில் ரெட்டிப்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் கோயில் தெருவில் சிறிது மழை பெய்தால்கூட மழைநீர் குளம்போல் தேங்கி விடுகிறது. கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீர் வெளியேற வழியில்லை. இதனால், தேங்கி நிற்கும் மழைநீர் மீண்டும் உலர்வதற்கு 20 நாட்களுக்கும் மேலாகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் முதியவர்கள், மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.எனவே, ரெட்டிப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும், மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபடுவோம், கலெக்டரிடம் நேரில் புகார் தெரிவிக்க உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.