×

குளத்தூர் வடக்கு கண்மாயில் சிதிலமடைந்த மடையை சீரமைக்க வலியுறுத்தல்

குளத்தூர்: குளத்தூர் வடக்கு கண்மாயில் சிதிலமடைந்த மடையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் முக்கிய பகுதியானது வடக்கு கண்மாய். இக்கண்மாயை நம்பி பல ஏக்கர் விவசாய  நிலங்கள் உள்ளன. இக்கண்மாயின் கிழக்கு பகுதியில் உள்ள நீர்வழி மடை பல வருடங்களாக சீரமைக்காமல் கிடப்பில்  போடப்பட்டதால் மடை சிதிலமடைந்து சீமைகருவேல மரமுட்கள் அடைத்து நீர்வழி துவாரமின்றி காணப்படுகிறது. மேலும்  மடை சுவர்களும் கற்கள் பெயர்ந்து இடிந்தநிலையில் காட்சியளிக்கிறது. கண்மாய் தூர்வாராமல் மடைகுளிக்கு மேல் கரம்பை  மண் மேடாகி தூர்ந்து போய் உள்ளது. இதனால் அப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு கண்மாயில் தேங்கும் தண்ணீரை  பாய்ச்ச முடியாத சூழ்நிலை உள்ளதால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித  நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொண்டதாக தெரியவில்லை. மேலும் வருகிற பருவமழைகாலத்திற்குள்  சிதிலமடைந்த மடையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: குளத்தூர் பகுதியில் உள்ள கண்மாய்களில் வடக்குகண்மாய்  விவசாயிகளுக்கு முக்கிய பகுதியாகும். வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் இக்கண்மாயில்  தேக்கப்படும். பருவமழை சிறிதே பெய்து பொய்த்து போகும் நேரத்தில் அப்பகுதியையொட்டியுள்ள விவசாயநிலங்களுக்கு  இதிலிருந்து நீர் பாய்ச்சப்பட்டு விவசாயிகள் மேற்கொண்ட விவசாயப்பணிகளை தொடர்வர். கடந்த 20வருடங்களுக்கு முன்பு  அமைக்கப்பட்ட வடக்கு கண்மாய் கீழ்பகுதி மடை அதன்பின்பு பராமரிப்பு என்பதே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு  சிதிலமடைந்து நீர்பாய்ச்ச ஏதுவாக இல்லாமல் போனது. நாங்களும் வருடந்தோறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

மேலும் பருவமழை துவங்குவதற்கு சில வாரங்களே உள்ள  நிலையில் இந்த வருடமும் கண்மாய் தூர்வாரவும் இல்லை. மடை சீரமைக்கவும் இல்லை. இதனால் இக்கண்மாய் நீரை  நம்பியுள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே வானம் பார்த்த பூமியில் விவசாயம்  மேற்கொள்ளும் இப்பகுதி விவசாயிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகிற பருவமழை  காலத்திற்குள் சிதிலமடைந்த மடையை சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kulathur North ,Kulathur , northern, Kulathur Insisting , shattered, fold
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா