தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை அருகே சிவாயம் ஊராட்சி அலங்காரிபட்டி கிராம மக்களுக்கு சொந்தமான முப்பனகச்சி மந்தையின் சலைஎருது என்று அழைக்கப்படும் 24வயது சாமி மாட்டை பொதுமக்கள் பராமரித்து வந்தனர். இந்த சலைஎருது மாடு இப்பகுதி கிராமமக்களின் முப்பனகச்சி மந்தை சார்பில் 30க்கும் மேற்பட்ட மாலைதாண்டும் போட்டியில் கலந்து கொண்டது. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் பெற்று சிறந்த மாடாகவும் இருந்து வந்து உள்ளது.இந்நிலையில் வயது முதிர்வால் கடந்த ஒரு ஆண்டாக உடல்நிலை குறைவால் இருந்து வந்த சாமி மாடு நேற்று முன்தினம் இரவு இறந்தது. இதையொட்டி கிராம மக்கள் அனைவரும் மஞ்சள் கதர் ஆடையை மாட்டின் மீது உடுத்தி மாலை அணிவித்து அலங்காரம் செய்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மந்தையில் வைத்தனர். தகவல் அறிந்த திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 14 மந்தையர்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி மாட்டிற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் பாரம்பரியம்மிக்க தேவராட்டம், கும்மிபாடல், ஒப்பாரி, உருமி மேளம், தப்பாட்டம் போன்ற வாணவேடிக்கையுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தினர். சாமி மாட்டை ஊர்வலமாக எடுத்து சென்று குலவழக்கப்படி அடக்கம் செய்தனர். கரூர், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். தங்கம், வெள்ளி போன்ற பரிசுகளை பெற்று இப்பகுதிக்கு பெருமை சேர்த்து வந்ததுடன், கிராம மக்களிடையே பாசத்துடன் இருந்து சாமி மாடு இறந்ததால் இப்பகுதி பொதுமக்கள் சோகத்துடன் இருந்தனர்.