×

குமரி மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் தேவாலயங்களில் பிரார்த்தனை: 5 மாதங்களுக்கு பின் மகிழ்ச்சி

நாகர்கோவில்: குமரி மாவட்ட தேவாலயங்களில் 5 மாதங்களுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நேற்று  நடைபெற்றது.தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பின், கடந்த 1ம் தேதி வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. மேலும் 2 மாதங்களுக்கு பின்,  ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று  ஏராளமானவர்கள் பிரார்த்தனைக்கு வந்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் அரசின் விதிமுறைப்படி  சமூக  இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். ஆலயங்களுக்கு வந்தவர்கள் முக கவசம்  அணிந்து, சானிடைசர் கொடுத்து, உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.  இடைவெளிகளுடன்  இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

நாகர்கோவில் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில், 100 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர். ஆலயத்துக்கு வந்தவர்களின் பெயர்,  முகவரி, செல்போன் எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு  இருந்தது. அதன்படி அனைவருமே முக கவசம் அணிந்து இருந்தனர். 5 மாதங்களுக்கு பின், ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயம்  வந்து பிரார்த்தனை செய்தது மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்தனர். குழந்தைகள், வயதானவர்கள்  அனுமதிக்கப்பட வில்லை. ஏற்கனவே இது தொடர்பாக அரசின் வழிகாட்டு முறைகள் என்னென்ன? என்பது பற்றி பிஷப்புகள்  உரிய அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : churches ,district ,Kumari ,Joy , Praying ,churches,social ,gap ,Kumari
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...