வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாணிப்பாறை பகுதியிலுள்ள அருவிகளில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. இப்பகுதியில் நேற்று முன்தினம் மூன்றரை மணிநேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அனைத்து நீரோடைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாணிப்பாறை பகுதியிலுள்ள வழுக்கல் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கோயில் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் லிங்கம் ஓடை வழியாக ஆலங்குளம், மாத்தூர்குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கு செல்லும். நேற்று முன்தினம் பெய்த மழையால் லிங்கம் ஓடையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து. இதனால் கல்லணை ஆற்றுப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் ஆகாசம்பட்டி கிராமத்திற்குள் புகும் அபாயம் ஏற்பட்டது.தாசில்தார் ராமதாஸ் தலைமையில் வருவாய்த்துறையினர் நள்ளிரவில் கல்லணையாற்று பகுதி அடைப்பை சரிசெய்தனர். இதனால் ஊருக்குள் வெள்ளம் செல்வது தடுக்கப்பட்டது. லிங்கம் கோயில் ஓடையில் தண்ணீர் செல்வதால் வாகனங்களில் தாணிப்பாறைக்கு செல்வது துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகாராஜபுரம் வழியாக தாணிப்பாறை சென்று வருகின்றனர்.கடந்த 2015, மே மாதத்தில் கோயில் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பக்தர்கள் உயிரிழந்தனர். 2015க்கு பிறகு தற்போது காட்டாற்று வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.