சென்னை:விபத்து, உடல் நலக்குறைவால் உயிரிழந்த உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சட்டம் (ம) ஒழுங்கு பிரிவில் முதல் நிலை பெண் காவலராக பணிபுரிந்து வந்த எழிலரசி, யானைக்கவுனி காவல் நிலையத்தில் சட்டம் (ம) ஒழுங்கு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த சுரேஷ், பட்டாபிராம் காவல் நிலையம் சட்டம் (ம) ஒழுங்கு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த வெங்கடேசன், மாதவரம் போக்குவரத்து காவல் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த மோகன், துறைமுகம் காவல் நிலைய சட்டம் (ம) ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஹரிகிருஷ்ணன், புதுப்பேட்டை பணியிடை பயிற்சி மையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சேகர், வேப்பேரி குற்ற ஆவண காப்பகத்தில் பெண் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சாந்தி ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
இதேபோல், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை 8ம் அணியில் 2ம் நிலை காவலராக பணிபுரிந்து வந்த ராஜா, புனித தோமையார் மலை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நடராஜன் ஆகியோர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அதன்படி தமிழகம் முழுவதும் உடல் நலக் குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கண்ட துயர சம்பவங்களில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.