சென்னை: ஊரடங்கில் முழு முடக்கம் இல்லாத முதல் ஞாயிற்றுகிழமையான நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளின் எண்ணிக்கை நூறை கடந்து விட்டது. பயணிகளின் எண்ணிக்கையும் ஊரடங்கு காலத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 51 விமானங்கள் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு புறப்பட்டு செல்கின்றன. அந்த விமானங்களில் பயணிக்க சுமார் 5 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதைப்போல் உள்நாட்டு முனையத்திற்கு நேற்று வந்த 51 விமானங்களில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். நேற்று ஒரேநாளில் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் 102 விமானங்களில் சுமார் 12 ஆயிரம் பேர் பயணித்தனர்.
ஊரடங்கு காலத்தில் நேற்றுதான் மிக அதிகமான விமானங்களும், பயணிகளும் பயணம் செய்தனர். நேற்றுமுன்தினம் வரை 90 விமானங்கள் அதிகபட்சமாக 10,500 பயணிகள் தான் பயணித்தனர். அதோடு சென்னை உள்நாட்டு முனையத்திலிருந்து நேற்று புதிதாக ஜெய்ப்பூர், பாட்னா, ஜோத்பூர், ஹூப்ளி ஆகிய இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னை விமான நிலையம் பொதுவாக ஞாயிற்றுகிழமைகளில் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வெறிச்சோடி காணப்படும். ஆனால் நேற்று வழக்கத்திற்கு மாறாக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து சென்னை உள்நாட்டு விமான நிலையம் களைகட்டுகிறது. இதன் மூலம் விமான போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பி உள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.