- உடல் பரிசோதனை
- குணப்படுத்துபவர்கள்
- ராஜீவ் காந்தி மருத்துவமனை தொடர் கண்காணிப்பு மையம்
- ஆலோசனைகளை
- கொரோனா
- ராஜீவ் காந்தி மருத்துவமனை தொடர் கண்காணிப்பு மையம்
சென்னை : கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் உடல்நிலையை கண்காணிக்க ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தொடர் கண்காணிப்பு மையத்தில் முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் உணவு, இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 4 லட்சம் பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டர்களுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து இந்தியாவிலேயே சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு மையத்தில் தினசரி 10 முதல் 15 நபர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனைகள் மூலம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக கண்காணிப்பு மையத்தில் சிகிச்சை பெற்றவர் கூறியதாவது: தொடர் கண்காணிப்பு மையத்தில் உயரம், உடல் எடை, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இசிஜி எடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உணவு பழக்கவழக்கம் தொடர்பான ஆலோசனை, மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன்பிறகு இயற்கை சிகிச்சை முயற்சி மூச்சு பயிற்சி எப்படி செய்வது என்று ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன்பிறகு இரண்டாவது ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு மருத்துவர் ஆலோசனை வழங்கப்படுகிறது. மருத்துவ ஆலோசனையில் உடலில் எந்த பிரச்னையும் இல்லை என்றால் விட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. வேறு ஏதேனும் பிரச்னை இருந்தால் அது தொடர்பான சிறப்பு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி பதிவேடு பராமரிக்கப்படுகிறது. முழு உடல் பரிசோதனையில் செய்யும் பெரும்பலான பரிசோதனைகள் இந்த தொடர் கண்காணிப்பு மையத்தில் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.