சென்னை: தென் மண்டல கலாச்சார மையத்தின் இயக்குநர் மறைவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கவர்னர் பன்வாரிவால் புரோகித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தென் மண்டல கலாச்சார மையத்தின் இயக்குநர் எம்.பாலசுப்பிரமணியத்தின் திடீர் மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பாலசுப்பிரமணியன் மிருதங்கத்தில் புகழ்பெற்ற கலைஞராக திகழ்ந்தார். இவர் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் கலைப் பிரிவின் முதல்வர் மற்றும் பல்வேறு இசைக் கல்லூரிகளில் முதல்வராக பணியாற்றி உள்ளார். மேலும் கலை தொடர்பான அரிய படைப்புகளையும் ஆவணப்படுத்தினார். கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தேசிய அளவில் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவு இந்தியாவில் உள்ள கலைஞர்களுக்கும் குறிப்பாக தென் மண்டலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.