×

அரசு விதிகளை மீறி கல்விக்கட்டணம் வசூலிக்கவில்லை: டி.என்.சி.இளங்கோவன், செயலாளர் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு

பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. இந்த நேரத்திலும் கல்விக் கட்டணம் வசூலிப்பது எல்லாம் நியாயமானதுதானா?
கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே மாணவர்களுக்கும், பள்ளிக்கும் தொடர்பு பாலமாக உள்ளது. இந்த வகுப்புகளை கூட, நடத்தாவிட்டால் அவர்களுக்கு படிப்பின் மீதுள்ள நாட்டம், அறவே குறைந்துவிடும். படிப்பின் மீது ஆர்வம் இல்லாத சில மாணவர்களிடம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் குறித்து மாற்று கருத்து உள்ளது. தங்கள் பிள்ளைகள் ஆன்லைன் வழியில் கல்வி கற்பது தற்போதைய சிறந்த யுக்திகளில் ஒன்று என பெற்றோரே  எங்களிடம் தெரிவிக்கின்றனர்.

பள்ளிகள் செயல்படாத நிலையில் மாணவர் சேர்க்கையும், கல்விக்கட்டண வசூலும் தேவையா என்கிறார்கள். எந்த நேரத்தில் அரசு, பள்ளிகளை திறக்கச் சொன்னாலும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். அதே நேரத்தில் மாணவர்களின் படிப்பும் தடைபட்டு விடக்கூடாது என்பதே இதற்கு காரணம். கல்விக்கட்டணம் பெற்றோரின் நிலையறிந்தே வசூலிக்கப்படுகிறது. அரசு விதிமுறைகளை மீறி, எந்த தனியார் பள்ளியும் கட்டண வசூலில் ஈடுபடவில்லை. அப்படி விதிகளை மீறி கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து ஆதாரத்துடன் புகார் கொடுத்தால், எங்கள் சங்கத்தின் சார்பில் நடவடிக்கைக்கு உட்படுத்தவும் தயார்.

அனைத்து தனியார் பள்ளிகளும் ஊழியர்களுக்குரிய சம்பளத்தை கொடுத்து வருகிறது. ஆனால் வழக்கமான சம்பளம் சற்று குறைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு 70 சதவீத சம்பளமும், மற்றவர்களுக்கு 50 சதவீத சம்பளமும் வழங்கப்படுகிறது. இதேபோல் டிரைவர், தூய்மை பணியாளர், உதவியாளர் என்று அனைவருக்கும் வழக்கமான சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்குச் செல்ல டி.சி. தரவேண்டும் என்றால் 3 மாத கல்விக்கட்டணத்தை முன்கூட்டியே தரவேண்டும் என்ற புகாரிலும் உண்மையில்லை. பலருக்கு படித்த பள்ளியிலேயே, தொடர்ந்து படிக்க வாய்ப்பு அளிக்கவில்லை என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளது. நிச்சயமாக மாநகரம், நகரம், ஊரகங்களில் உள்ள பள்ளிகளில் இந்த பிரச்னை அறவே கிடையாது. பெருநகரங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சில பள்ளிகளில் மட்டும் இது போன்ற சர்ச்சைகள் நடக்க வாய்ப்புள்ளது. அதற்கு அந்த பள்ளிகளின் நிர்வாகக்குழு எடுக்கும் முடிவுகளே காரணம்.   

நடப்பாண்டும் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதில் எந்த குளறுபடியும் இல்லை. இதில் மாணவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் 3 பள்ளிகளுக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருக்கிறார். இதில் ஏதாவது ஒரு பள்ளியில் இடம் கிடைத்தால் மற்ற இரண்டு பள்ளிகளையும் நிராகரித்து விடுகிறார். இதனால் மேலும் 2மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு பறிபோகிறது. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வி சார்ந்த எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து மேம்பாட்டு நடவடிக்கைகளை, அரசு எடுத்தது. ஆனால் தற்போது அதிகாரிகள் சொல்வதை மட்டுமே அரசு கேட்கிறது. கல்வியில் தற்போதைய நிலை என்ன, அதில் நாம் புகுத்த வேண்டிய வழிமுறைகள் என்ன, உயர்கல்விக்கும், போட்டித்தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்களுக்கு எப்படி வழிகாட்டியாக இருக்க வேண்டும்,

அதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பது குறித்து கண்டிப்பாக கல்வியாளர்களுடன், அதிகாரிகள் கலந்தாய்வு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் முடிவெடுத்து திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். இதனால் எதிர்காலத்தில் மாணவர்கள் சந்திக்கப்போகும் பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். படிப்பின் மீது ஆர்வம் இல்லாத சில  மாணவர்களிடம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் குறித்து மாற்று கருத்து உள்ளது. தங்கள் பிள்ளைகள் ஆன்லைன் வழியில் கல்வி கற்பது தற்போதைய சிறந்த யுக்திகளில் ஒன்று என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

* சாதகத்தை விட பாதகம் தான் அதிகம்:  எஸ்.கிருபானந்தம், 11ம் வகுப்பு தனியார் பள்ளி மாணவர்
பள்ளிகளில் நேரடி வகுப்பு நடக்கும்போதே மாணவர்கள் கவனம் செலுத்தமாட்டார்கள். ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்த முடிகிறதா இல்லை விளையாட்டு போக்காக எடுத்துக்கொள்கிறார்களா?
ஆன்லைன் வகுப்புகளில் சிக்னல் பிரச்னையே பெரிய பிரச்னையாக உள்ளது. இதனால் பாடங்களில் சந்தேகங்கள் எழுந்தாலும் அவற்றை முழுமையாக கேட்டு தெரிந்து கொள்ளமுடியவில்லை. ஆன்லைன் வகுப்புகளுக்கு பதிலாக பாடங்கள் குறித்த வீடியோவை எடுத்து அவற்றை ஆசிரியர்கள் மாணவர்களின் செல்போன்களுக்கு அனுப்பலாம். இதன்மூலம் பாடத்தில் சந்தேகம் இருந்தாலும் வீடியோவை மறுபடியும் போட்டு பார்த்து எளிதாக கற்றுக்கொள்ள முடியும். யூ-டியூப்பில் உள்ள வீடியோக்கள் போன்று பாடங்களை வீடியோ எடுத்து அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும்.

வகுப்புகளுக்கு நேரடியாக சென்று பாடம் கவனிக்கும்போது சந்தேகம் இருந்தால் அவற்றை சக மாணவரிடம் கேட்டாவது தெரிந்துகொள்ளலாம். ஆனால், ஆன்லைன் வகுப்பில் அப்படி கேட்டு தெரிந்துகொள்ள முடிவதில்லை. இதேபோல், குழுவாக சேர்ந்து படிக்கும் போது பாடங்களில் எந்த சந்தேகம் இருந்தாலும் அதை அனைவரும் சேர்ந்து விளக்கிக்கொள்வோம். தெரிந்த விஷயங்களை அனைவரும் பகிர்ந்துகொள்வோம். ஆன்லைன் வகுப்புகளால் குழுவாக சேர்ந்து படிப்பது தடைபட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பு நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் பாடபுத்தகத்தை எடுத்து படிக்கவே முடியவில்லை. ஆன்லைன் வகுப்புகளால் என்னைப்போன்ற மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பானது ஆன்லைன் வகுப்புகளால் தடைபடுகிறது.   

வேதியியல், இயற்பியல், ஆங்கிலம் போன்ற பாடங்கள் ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் போது அவற்றை புரிந்துகொள்வது பெரும் சிரமமாக உள்ளது. ஆன்லைன் வகுப்புகளில் தியரி மட்டுமே எடுக்கப்படுகிறது. வேதியியல் போன்ற பாடங்களில் செய்முறை வகுப்புகள் இல்லாமல் அதை பற்றி புத்தகங்களில் மட்டுமே படிப்பதால் புரிந்துகொள்ள முடிவதில்லை. இதனால், யூடியூப்பில் உள்ள செய்முறை வீடியோக்களை பார்த்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம்.

என்னதான் ஆன்லைன் வகுப்பாக இருந்தாலும் அது பள்ளிக்கு சென்று படிக்கும் வகுப்பாக இருக்காது. பாடத்தை நேரடியாக கவனித்து அவற்றை உள்வாங்கிக்கொள்வது போல் ஆன்லைன் வகுப்புகள் இல்லை. 3 அல்லது 4 மணி நேரம் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கும் போது கவனம் செலுத்த முடிவதில்லை. கண்பார்வை பாதிப்பும், கவனக் குறைவும் ஏற்படுகிறது. ஏற்கனவே படித்த பாடங்கள் அனைத்தும் மறந்து விடுகிறது. ஆன்லைன் வகுப்புகளை நிறுத்திவிட்டு அடுத்தவாரமே பள்ளிகள் திறந்தால்  அனைவரும் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று படிப்போம்.   

ஆன்லைன் வகுப்புகளில் சக மாணவர்களின் வீடுகளில் எதாவது சத்தம் ஏற்பட்டால் அது எங்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் அமைகிறது. சிக்னல் கிடைக்காமல் வீட்டிற்கு வெளியே சென்று செல்போனில் பாடம் கவனிக்கும் போது அருகில் உள்ள சத்தங்களும் பெரும் பிரச்னையாக உள்ளது. சாதகமான விளைவை ஏற்படுத்துவதற்கு பதிலாக பாதகமான விளைவுகளையே ஆன்லைன் வகுப்புகள் ஏற்படுத்துகிறது. என்னதான் ஆன்லைன் வகுப்பாக இருந்தாலும்  அது பள்ளிக்கு சென்று படிக்கும் வகுப்பாக இருக்காது. பாடத்தை நேரடியாக  கவனித்து அவற்றை உள்வாங்கிக்கொள்வது போல் ஆன்லைன் வகுப்புகள் இல்லை.


Tags : Tamil Nadu Federation of Private Schools ,TNC Ilangovan , Violation of Government Rules, Tuition, TNC Ilangovan, Secretary Tamil Nadu Federation of Private Schools
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...