×

மாணவர்களிடம் வேற்றுமை உருவாகிறது: சே.அருமைநாதன், மாநில தலைவர் தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கம்

ஆன்லைன் வகுப்புகள் உண்மையிலேயே பலன் தரக்கூடிய வகையில் உள்ளதா? இதனால் பெற்றோர் மனநிறைவுடன் உள்ளனரா?
ஆன்லைன் வகுப்புகளை தனியார் பள்ளிகள் தங்களுடைய வருமானம் மற்றும் கல்வி கட்டணத்தை பெறவே ஆரம்பித்தார்கள். ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்றார்கள். ஆனால், அரசு ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து கவனமும் செலுத்தவில்லை. 70 சதவீதம் மாணவர்கள் அரசு பள்ளிகளிலும், 30 சதவீதம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலும் படிக்கிறார்கள். இதனால், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இதுகுறித்து கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்றார்கள். வசதியான பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தியதால் சமநிலை என்பது கேள்விக்குறியானது. இதனால், அரசு டிவியில் பாடம் நடத்தும் திட்டத்தை துவக்கியது.

 ஆன்லைன் வகுப்புகள் மூலம் தனியார் பள்ளிகளுக்கு எந்த செலவும் கிடையாது.  அதைத்தொடர்ந்து பெற்றோர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் அதிகம் வாங்கியதால் 40 சதவீதத்திற்கும் மேல் எந்தெந்த பள்ளிகள் கட்டணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றமும் எச்சரித்தது. ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது. தனியார் பள்ளிகளில் பணக்காரர்களின் பிள்ளைகள் தான் படிப்பார்கள் என்று இல்லை. கல்வி உரிமைச்சட்டத்தின்படி ஏழை மாணவர்கள் 5 லட்சம் பேர் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். இவர்களும் மொபைல் போன் கூட வாங்க முடியாத நிலையில் இருப்பவர்கள் தான். இவர்களுக்கும் பணத்தை கட்டினால் தான் புத்தகம் கொடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் கூறுகின்றன. இதனால், பெற்றோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகளை பொறுத்தவரையில் முதலில் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் தான். மாணவர்களுக்கு பாடம் எடுக்கும்போது பெற்றோர்களும் உடன் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி நிறுவன ஊழியர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகள் மாணவர்கள் மத்தியில் பெரும் வேற்றுமையையே உருவாக்கி உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இதனால் மன அழுத்தமே ஏற்பட்டுள்ளது. எனவே, ஆன்லைனில் வகுப்புகள் நடத்துவதற்கு பதிலாக கதை, வரலாறு, பொது அறிவு, நாடகம் போன்றவைகளை நடத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

வகுப்புகளில் நடத்தும் பாடத்திற்கு இணையாக எப்போதும் ஆன்லைன் வகுப்புகள் அமையாது. மாணவர்கள் உடல்ரீதியாகவும் மனசோர்விற்கும் ஆளாகிறார்கள். 4 மணி நேரம் வரையில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் தூங்கி விழும் நிலையே காணப்படுகிறது. நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் தீய விளைவுகளையே ஏற்படுத்தி வருகிறது. தனியார் பள்ளிகள் வருமானத்திற்கு செய்யும் இதுபோன்ற விஷயங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதால் மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைவருக்கும் இது மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது. ஆன்லைன் வகுப்புகளால் யாருக்கும் பயன் கிடையாது. தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே இது பயனாக உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் எப்போதும் முழுமையான கல்வியை கொடுக்காது. எனவே, இதை நிறுத்த வேண்டும். வகுப்புகளில் நடத்தும் பாடத்திற்கு இணையாக எப்போதும் ஆன்லைன் வகுப்புகள் அமையாது. மாணவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சோர்ந்து போகிறார்கள். ஆன்லைன் வகுப்புகள் எப்போதும் முழுமையான கல்வியை கொடுக்காது.

* ஆன்லைன் வகுப்புகளால் ஆரோக்கியம் குறையும்:  அலிப் எம்.மீரான், வழக்கறிஞர் (நெல்லை)
புதிய ஆன்லைன் கல்விமுறை பலனை தருமா? குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை என்ன? மாணவர்கள் பொறுப்பாக கற்கின்றனரா?
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தான் சாத்தியமாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தகுந்ததாக இல்லை. ஆன்லைனில் படிக்க பொருளாதார வசதியும் அவர்களிடமில்லை. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பில் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுவது செல்போன், லேப்டாப் உபயோகிப்பது.  நீண்ட நேரம் செல்போன், லேப்டாப்களை பார்ப்பதால் குழந்தைகளுக்கு கண் பிரச்னை, மூளை நரம்புகள் பாதிக்கப்படும். குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கு மேல் செல்போன் உபயோகிப்பது ஆபத்து என உலக சுகாதர மையம் கூட தெரிவித்துள்ளது. ஆனால் பல தனியார் பள்ளிகளில் 8 மணி நேரத்துக்கும் மேலாக மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் வர கட்டாயப் படுத்துகின்றனர்.

அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளில் பாடங்கள் மெயிலில் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டு, பாடம் நடத்தப்படுகிறது. ஆனால் நாம் ஆன்லைன் வகுப்புகளுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறோம். ஆன்லைன் வகுப்பை பொறுத்தவரை பல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கிடையாது. செல்போன், இன்டர்நெட் எப்படி உபயோகிப்பது என்று கூட சரியாக தெரியாது. அதனால் பெற்றோர்கள் செல்போனை குழந்தைகளிடம் கொடுத்து விடுகின்றனர். அதனை அவர்கள் எதற்கு  பயன்படுத்துகின்றனர் என்று பெற்றோருக்கே தெரிவதில்லை. முன்பு செல்போனை பிள்ளைகள் எடுக்க கூடாது என்று கண்டிப்போம்.

இப்போது நாமே கொடுக்கும் நிலை உருவாகிவிட்டது. இப்போதுள்ள மாணவர்கள், செல்போன், லேப்டாப் குறித்து பெற்றவர்களுக்கு சொல்லித் தரும் நிலை உருவாகிவிட்டது. அந்த அளவுக்கு இந்த 5 மாதத்தில் செல்போனில் உள்ள அத்தனை விவரங்களையும் தெரிந்து கொண்டுவிட்டனர்.ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் மட்டுமில்லாமல், ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இன்டர்நெட் உள்ளே செல்லும்போது பல்வேறு ஆபாச வீடியோக்களின் லிங்க் வருகிறது. அதனை தொட்டால் வீடியோ பிளே ஆகிறது. மேலும் மாணவர்கள் அதனை பார்க்கவும் நேரிடுது, சில மாணவர்கள் ஆன்லைன் கேம் விளையாடுகின்றனர். இவையெல்லாம் பெற்றோர்களுக்கு தெரிவதே இல்லை, குழந்தைகள் படிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்கின்றனர். சில பெற்றோர் வேலைக்காக வெளியே செல்வதால், செல்போனை கொடுத்து விட்டு செல்கின்றனர். அவர்களால் குழந்தைகளை கண்காணித்து கொண்டே இருக்க முடியாது.

எனவே காலத்தின் சூழ்நிலைக்கு ஆன்லைன் வகுப்பு நடந்தாலும், அது மாணவர்களின் கல்விக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பள்ளிக்கு நேரில் சென்று படிப்பதில் பல நன்மைகள் உள்ளது. மாணவர்களிடம் சேர்ந்து படிப்பது, உடற்கல்வி வகுப்பு, விளையாட்டு போட்டிகள், ஆசிரியர்களை பார்த்தால் மரியாதை என பல்வேறு சிறப்புகள், மாணவர்களுக்கான ஆரோக்கியங்கள் இருக்கும். ஆனால் இந்த சிறப்புகள் ஆன்லைன் வகுப்பில் இருக்குமா என்றால் கிடையாது. படிப்பில் ஏதேனும் சந்தேகம் என்றால் மாணவர்கள் ஆசிரியரிடம் கேட்பார்கள், ஆனால் ஆன்லைனில் அது சாத்தியம் இல்லை. இந்த கல்வி கண்துடைப்பு போலவே உள்ளது.

இதேநிலை நீடித்தால் பள்ளிகள் திறந்தாலும் ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாம் என்று சில தனியார் பள்ளிகள் கூறினாலும் கூறுவார்கள். இதற்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கவும் தயாராக உள்ளனர். இந்த ஆன்லைன் வகுப்பு மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், அறிவுக்கும் கேடு விளைவிக்கும். நிஜம் வேறு நிழல் வேறு. ஆன்லைன் படிப்பு நிழல் போன்றது. அந்த நிழலால் எந்த பலனும் கிடைக்காது. பள்ளிகள் திறந்தாலும் ஆன்லைனில் வகுப்பு எடுக்கலாம் என்று சில தனியார் பள்ளிகள் கூறினாலும் கூறுவார்கள். இதற்கு  கூடுதலாக கட்டணம் வசூலிக்கவும் தயாராக உள்ளனர்.


Tags : State President ,Tamil Nadu Student Parents Association , To students, diversity develops, S. Arumainathan, State President, Tamil Nadu Student Parents Union
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!