×

ஆர்.எஸ் மங்கலம் அருகே பேராபத்தை விளைவிக்க காத்திருக்கும் புயல் காப்பகம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடியில் உள்ள புயல் காப்பகம் பயனற்ற நிலையில் விபத்தை ஏற்படுத்து நிலையில் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள திருப்பாலைக்குடி கிராமத்தில் புயல், மழை போன்ற இயற்கை சீற்றத்தின் போது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு  புயல் காப்பகம் கட்டப்பட்டது. இயற்கை சீற்றத்தின் போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கு தங்க வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அந்த கட்டிடம் பழுதடைந்து விட்டதை கவனத்தில் கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு சேவை மைய கட்டிடத்திற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு புயல் அறிவிப்பு வந்த காலகட்டங்களில் இப்பகுதி பொதுமக்கள் அங்கு தான் தங்க வைக்கப்பட்டனர். புயல் காப்பகம் பழுதடைந்ததை காரணம் காட்டிதான் கோடி கணக்கில் செலவு செய்து புதிய பல் நோக்கு சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டது அவ்வாறு கட்டப்பட்ட பின்னரும் பழைய புயல் காப்பகத்தை அகற்றவோ அல்லது சீரமைக்கமாலோ இருப்பது இப்பகுதி மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அந்த புயல் காப்பக கட்டிடம் கொஞ்சம், கொஞ்சமாக பெயர்ந்து விழுந்து வருவதுடன் நாளுக்கு நாள் கூடுதலாக பழுதடைந்து வருகிறது.

இதனால் அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள், அப்பகுதியில் நடமாடும் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்து விட்டால் ஏதேனும் உயிர்சேதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். எனவே, இந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டம் செய்ய வேண்டும். இல்லையெனில் கட்டிடத்தின் உறுதித்தன்மையை கண்டறிந்து நன்றாக இருக்கும் பட்சத்தில் கட்டிடத்தை பழுது பார்த்து வேறு ஏதாவது பொதுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்டகலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : RS Mangalam ,disaster , RS Mangalam, Storm Archive
× RELATED மாவட்ட பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவர் முதலிடம்