நாகை: நாகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி அரியர் மாணவர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ஒரு சில பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கல்லூரி தேர்வுகள் என பெரும்பாலான தேர்வுகள் நடைபெறவில்லை. தேர்வுகள் மீண்டும் நடத்தப்படுமா? எவ்வாறு தேர்வுகள் நடத்தப்படும் என்று மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனிதேர்வர்கள் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கல்லூரி தேர்வில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை தவிர பிற தேர்வுகள் எழுத விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த காலகட்டத்தில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள் நிலை என்ன என்று தெரியாமல் மன குழப்பத்தில் மாணவர்கள் இருந்தனர். மாணவர்களின் மன குழப்பத்தை போக்கும் வகையில் அரியர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பால் அரியர் தேர்வு எழுத காத்திருந்த அனைத்து மாணவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரியர் தேர்வு மாணவர்களை வெற்றிபெற செய்த அரசனே வாழ்க என்று இணையதளத்தில் பதிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நாகை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடியை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வரம் தந்த கடவுளே, எங்கள் வசந்தத்தின் விடியலே, வணங்குகிறோம் தலைவா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. போஸ்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட், பேண்ட் அணிந்துள்ளார். போஸ்டரில் அரியர் பாய்ஸ் மற்றும் அரியர்சை வீட்டில் மறைத்த மாணவர்கள், நாகப்பட்டினம் என்று உள்ளது. போஸ்டரில் 8 பேரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.