சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பயண திறன் அட்டைகளை பாதுகாப்பான முறையில் புதுப்பிக்கவும், புதிதாக பெறவும் வழக்கம் போல் டிக்கெட் கவுன்டர்கள் செயல்படும். மின்னணு அலைவரிசையில் தொடாமல் பயண அட்டையை பயன்படுத்தும் க்யூ-ஆர் வசதிகள் அனைத்து நிலையங்களிலும் உள்ளன. டிராவல் கார்ட் ரீடரும் நிறுவப்பட்டுள்ளது. இணையவழியாகவும், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி கருவிகள் வழியாகவும் பணப்பரிவர்த்தனையற்ற திறன் அட்டை புதுப்பிக்கும் வசதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஒருவழிப்பயண டிக்கெட்டுகள் வழங்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து வாகன நிறுத்தங்களிலும் மின்னணு பணப்பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுகின்றன. காலாவதியான நிலுவைத்தொகை உள்ள வாகன நிறுத்த அட்டைகளை அக்டோபர் 7ம் தேதிக்குள் பயணிகள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
இதேபோல், பயன்படுத்தப்படாத நிலுவைத்தொகையுள்ள திறன் அட்டைகளின் கால அளவை அக்டோபர் 7ம் தேதிக்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். பயணிகள் தங்கள் பயண அட்டை விவரங்களான ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டுத்தொகை, இருப்புத்தொகை, மீதமுள்ள பயண எண்ணிக்கை, பயணம் குறித்த தகவல்கள் ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்ளலாம்.
மேலும், பயண வழி மாற்றியமைக்கும் வசதி, பயணத்தை ரத்து செய்யும் வசதிகள் ஆகியவை பயணிகளின் வசதிக்கேற்ப எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மின்னனு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் டெபிட் கார்டு, கடன் அட்டை, யுபிஐ, இணையவங்கி சேவை ஆகிய பயன்பாடுகள் 32 ரயில் நிலையங்களிலும் செய்யப்பட்டுள்ளன.