×

‘உன் பொண்டாட்டியை காதலிக்கிறேன்’ தகராறு செய்த வாலிபர் கொலை: கைதான கணவன் பரபரப்பு வாக்குமூலம்

சேலம்: நாங்கள் இருவரும் காதலிக்கிறோம், உன் பொண்டாட்டியை என்னோடு அனுப்பி வை என்று வீட்டுக்கே வந்து தகராறு செய்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், வருசநாடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (29). இவர் கடந்த சில ஆண்டுகளாக, சேலம் மாவட்டம் சங்ககிரி நாட்டாம்பாளையம் பகுதியில் உள்ள கிரானைட் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், சங்ககிரி-பள்ளிபாளையம் பிரிவு ரோடு பகுதிக்கு பார்த்திபன் சென்றார். அங்கு மர்ம நபர்கள் வழிமறித்து கத்தி, அரிவாளை கொண்டு அவரை தாக்கினர். ரத்த காயங்களுடன் தப்பி ஓடிய அவரை, ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் படுகாயமடைந்த பார்த்திபன், அங்குள்ள பெட்ரோல் பங்க் முன்பு ரத்தவெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:

சங்ககிரி புதுவளவு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் மனைவி பிரியங்கா(23). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள இட்லி கடையில் வேலை செய்த போது, பார்த்திபன் அடிக்கடி அந்த கடைக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். பெயின்டரான சரத்குமார் காலையில் வேலைக்கு சென்றால், இரவில்தான் வீடு திரும்புவார். இதை பயன்படுத்தி இந்த ஜோடி, அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2 நாளுக்கு முன்பு, பிரியங்கா  நீண்டநேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த சரத்குமார், இதுதொடர்பாக விசாரித்த போது, பார்த்திபனுடனான கள்ளக்காதல் தெரியவந்தது. இதனால் ஆவேசமடைந்த சரத்குமார், மனைவியிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டார். இதனால், பிரியங்கா 2 நாட்களாக பார்த்திபனுடன் பேச முடியவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு, போதையில் பிரியங்காவை தேடி அவரது வீட்டுக்கே பார்த்திபன் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த சரத்குமாரிடம், ‘உனது மனைவியும், நானும் காதலிக்கிறோம். அவளை என்னுடன் அனுப்பு,’ என கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது.

பின்னர், பார்த்திபன் அங்கிருந்து சென்றுள்ளார். ஆனால், ஆத்திரத்தில் இருந்த சரத்குமார், இதுபற்றி மாமனார் தங்கவேல், மைத்துனர் நந்தகுமார் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். உடனே 3 பேரும் வழிமறித்துள்ளனர். அப்போது, சரத்குமார், நந்தகுமார் ஆகியோர் ஓடஓட விரட்டிச்சென்று கத்தியால் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியுள்ளனர். இதுபற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் சரத்குமார், தங்கவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர். சரத்குமார் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் இந்த விவரத்தை கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவத்தில், தலைமறைவாக உள்ள நந்தகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : niece ,teenager , ‘I love your niece’, dispute, teen murder, arrested husband, confession
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை