திருவனந்தபுரம்: பெங்களூருவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த முகமது அனூபுக்கு, கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கோடியேறியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பினீஷ் கோடியேறி கூறுகையில், தான் முகமது அனூபுக்கு தொழில் ரீதியாக கடன் கொடுத்ததாகவும், அவருக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு உள்ளது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், தங்க கடத்தல் வழக்கில் முக்கிய நபரான சொப்னா பெங்களூரு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு முகமது அனூப் மற்றும் பினீஷ் கோடியேறி ஆகியோர் 8 நிமிடங்கள் பேசியுள்ளனர். அதுபோல முகமது அனூப், பினீஷ் கோடியேறியுடன் கடந்த 3 மாதங்களில் 76 முறை பேசியுள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 58 முறை இருவரும் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். மேலும், ஜூலை மாதத்தில் 10 முறையும், ஆகஸ்ட்டில் 8 முறையும் பேசியுள்ளனர். மேலும் பினீஷ் கோடியேறியின் நெருங்கிய நண்பர்களையும் முகமது அனூப் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதில் ஒருவரை 75 முறை அழைத்து பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் செல்போன் ஆதாரங்களை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சேகரித்துள்ளது. இதற்கிடையே முகமது அனூபின் செல்போனில் ‘ரமீஸ் ரமி’ என சேமித்து வைத்துள்ள போன் நம்பர், கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான ரமீசின் செல்போன் எண்ணாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.