×

தொழிலதிபர் வீட்டில் வைத்திருந்த 90 சவரன், 7 கிலோ வெள்ளி ரூ.3 லட்சம் துணிகர கொள்ளை: போலீசார் விசாரணை

சென்னை: தொழிலதிபர் வீட்டில் வைத்திருந்த 90 சவரன் நகை, 7 கிலோ வெள்ளி, ரூ.3 லட்சம் கொள்ளைபோனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பைகிராப்ட்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த டில்லி (75) என்பவர், தனது சகோதரி சரோஜினியுடன் வசித்து வருகிறார். இவர், திருமணத்துக்கு தேவையான சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் வயதானவர்கள் என்பதால் வீட்டு வேலைக்காக பெரம்பூர் பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு நியமித்தனர். இதற்கிடையே வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டதால் கடந்த 2019 டிசம்பரில் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் 2வது தளத்தில் உள்ள  பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 90 சவரன் நகைகள், 7 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.3 லட்சம் ஆகியவை கொள்ளைபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொரேனா ஊரடங்கு காரணமாக இவர்கள் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்க முடியவில்லை.

இதனால், தொலைபேசி மூலம் நேற்று முன்தினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அண்ணாசாலை குற்றப்பிரிவு காவல் நிலையத்திலிருந்து வீட்டிற்கே வந்து புகார் மனுவை பெற்று வந்துள்ளனர். இதையடுத்து அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். சூளை, சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கிரிட்ஷா என்பவரின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி ரூ.45 லட்சம் மாயமானது. இதில், வீட்டு வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக அவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : house ,venture robbery ,Police investigation ,businessman , Businessman's house, 90 shaving, 7 kg silver, Rs 3 lakh, venture robbery, police investigation
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்