ஆம்பூர்: ஆம்பூர் அருகே கூலிப்படை ஏவி அமமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரை 2 மாதத்துக்கு முன் கார் ஏற்றிக்கொல்ல முயன்றதாக தற்போது ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ் (43), அமமுக மாதனூர் ஒன்றிய பிரதிநிதி. இவர் கடந்த 28ம் தேதி பாலாற்று தரைப்பாலத்தின் கீழ், கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து ரமேஷின் மனைவி நர்ஸ் ஜெயந்தி, அவரது தாய் சரஸ்வதி மற்றும் உறவினர்கள், கூலிப்படையை சேர்ந்தவர்கள் என 6 பேரை கைது செய்தனர்.
அப்போது, ரமேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து ஜெயந்தியை அடித்து கொடுமைப்படுத்தியதால் கூலிப்படை ஏவி கொன்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்தனர். மேலும் ரமேஷின் கொடுமை தாங்காமல் ஏற்கனவே கடந்த 2 மாதத்துக்கு முன் கார் ஏற்றி அவரை கொல்ல முயன்றதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 2 மாதத்துக்கு முன் விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மிலிட்டரி கேண்டீன் பக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் அருகே ரமேஷை கார் ஏற்றிக்கொல்ல முயற்சித்த வழக்கில் மிட்டாளத்தை சேர்ந்த சுதன் (24) என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மின்னூர் டாஸ்மாக் கடை அருகே அவரை போலீசார் கைது செய்தனர்.