மதுரை: தொடர் மழையின் காரணமாக மதுரைச்சாலைகள் குண்டும் குழியுமாக மாறிக்கிடக்கின்றன.மதுரையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. மாநகராட்சி சார்பில் வார்டுகளில் பெரும்பாலான சாலைகள் தார் ரோடு போடப்பட்டுள்ளது. இந்த சாலைகள் தொடர் மழையின் காரணமாக குண்டும் குழியுமாக மாறி வருகிறது. புதுஜெயில் ரோடு சாலை முழுவதும் மிக மோசமாக உள்ளது. இந்த சாலையை வாகனங்கள் கடப்பதே பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.இது தவிர 4 மாசி வீதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடந்து வருகிறது. இங்குள்ள சாலை ஓரங்களில் தோண்டி நடைபாதை அமைக்கப்பட்டது. இதை சரிவர மூடாததால் மழை காரணமாக மண் பொதிந்து கிடக்கிறது. வாகனங்களின் டயர்கள் இதில் சிக்கிக்கொள்கின்றன. மேலும் ரோடும் போடவில்லை. இதனால் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. மழை பெய்து கொண்டிருக்கும் போது இந்த சாலையை கடந்த பலர், பள்ளத்திற்குள் இருசக்கர வாகனத்துடன் சிக்கிய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து டிபிகே ரோடு மிக மோசமாக மாறிக்கிடக்கிறது. இவற்றை சரி செய்ய இதுவரை மாநகராட்சி முன்வரவில்லை.
பழங்காநத்தத்தில் பைபாஸ் ரோடு பிரியும் சந்திப்பில் உள்ள ரவுண்டானாவில் துவங்கி பழங்காநத்தம் மெயின் ரோடு நுழையும் இடம் வரை பெயர்ந்து கிடக்கிறது. வண்டியூரை சுற்றிய பகுதிகளான யாகப்பா நகர், பிகேஎம் நகர், சங்குநகர் ஆகிய ரோடுகள் மிக மோசமாக உள்ளன. பல ஆண்டுகளாக இங்கு தார்ச்சாலைகள் போடாமல் விட்டதால் பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது மழையால் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது.வண்டியூரை சேர்ந்த துரைப்பாண்டி கூறுகையில், “வண்டியூரில் பெரும்பாலான சாலைகள் மிக மோசமாக உள்ளது. சாலையின் நடுவில் பள்ளங்கள் தான் அதிகம். இந்த பகுதியை சபிக்கப்பட்ட பகுதியாக மாநகராட்சி பார்க்கிறது. பலமுறை முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாற்று நட்டு விவசாயம் வேண்டுமானால் இந்த ரோடுகளில் பார்க்கலாம்” என்றார்.
இப்போதைக்கு ‘நோ’
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மழை சீசன் என்பதால் புதிதாக சாலைகள் தற்போதைக்கு போட முடியாது. மழை சீசன் முடிந்தபிறகு அனைத்து சாலைகளும் புதிதாக போடப்படும்’’ என்றார்.