சோழவந்தான்: தினகரன் செய்தி எதிரொலியாக சோழவந்தானில் பல்லாங்குழி சாலையை சீரமைக்கும் பணி துவங்கியது.சோழவந்தானில் ரயில்வே பால பணிகள் கடந்த 2016ம் ஆண்டு துவங்கியது. பாலம் கட்டுமான பணிகள் முடிந்தாலும், சர்வீஸ் சாலை, இரு பகுதியில் இறங்கு சாலை பணிகள் முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பஸ் நிலையம், ரயில்வே கேட், வாடிப்பட்டி சாலை பகுதிகளில் பல்லாங்குழி போல் அதிக பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு பயனற்ற நிலை ஏற்பட்டது. மழை பெய்ததால் அதிக சேறும், சகதியுமாக மாறியதால் நடந்து செல்பவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து காயமடைந்து வந்தனர். பொதுமக்கள் படும் துயர் குறித்து நேற்று முன்தினம் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து பெரிய பள்ளங்களை மூடி தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கண்ணன் முன்னிலையில் நேற்று துவங்கியது. இதனால் பொதுமக்கள் தற்காலிகமாக நிம்மதிடைந்துள்ளனர்.இருப்பினும் பாலப்பணிகளை முடித்து, நிரந்தரமான சர்வீஸ் சாலை, இரு பகுதியில் இறங்கு சாலை அமைத்து விரைவில் புதிய பாலத்தில் போக்குவரத்து துவங்கினால் மட்டுமே இவ்வூர் மக்களின் நீண்டநாள் துயர் முடிவுக்கு வரும்.