தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே, மஞ்சளாறு அணையில் ஒரே நாளில் 4 அடி நீர்மட்டம் உயரந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தேவதானப்பட்டி அருகே, மேற்கு தொடர்ச்சிமலை கொடைக்கானல் அடிவாரத்தில் மஞ்சளாறு அணை உள்ளது. 57 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் 35 அடியாக இருந்தது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இருட்டாறு, வரட்டாறு, மூலையாறு, மஞ்சளாறு ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து நீர்மட்டம் 39 அடியாக உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர்மழையால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அணைக்கு 335 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மஞ்சளாறு அணை பகுதியில் நேற்று 11.2 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணை மளமளவென உயர்ந்து வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.