பள்ளிபாளையம்: காடச்சநல்லூர் ஊராட்சியில், பொதுமக்கள் வீடுகளுக்கு செல்ல 10 ஆண்டுகளாக சாலை வசதியை ஏற்படுத்த மறுத்து வரும் அதிகாரிகள், டாஸ்மாக் மதுபான கடைக்கு செல்ல புதிய பாலம் கட்டுவதால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பள்ளிபாளையம் ஒன்றியம், காடச்சநல்லூர் ஊராட்சி தாஜ்நகரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு வசிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளை விற்பனை செய்த போது போடப்பட்ட சாலைகள் தூர்ந்து போயுள்ளது. சாக்கடை வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட எதுவும் முறையாக இல்லை. இதனால் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்குகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
தார்சாலை, சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைத்து தரக்கோரி, 10 ஆண்டுகளாக ஊராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் வினோத்குமார் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளாக சாலை, சாக்கடை வசதி முற்றிலுமாக இல்லை. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், குடியிருப்பின் முன்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைக்கு செல்ல, பல லட்சம் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு வருவது வேதனையை அளிக்கிறது,’ என்றார்.