திருப்புவனம்: தமிழக அரசு அறிவிப்பின்படி செப்.1ம் தேதி முதல் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் திறக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக பக்தர்கள் சராசரியாக வந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். முன்னதாக ஊழியர்கள் பக்தர்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து, உடல்வெப்ப பரிசோதனை, சானிடைசர் வழங்கிய பின் கோயிலுக்குள் அனுமதிக்கின்றனர். இங்கு பகல் ஒரு மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும். இதனை காண கூட்டம் அதிகரித்து விடும் என்பதால் முன்னதாகவே பக்தர்கள் கோயிலுக்கு வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் ஏராளமான பக்தர்கள் உச்சிக்கால பூஜையை காண முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். இதுகுறித்து உதவி ஆணையர் செல்வி கூறுகையில், ‘‘உச்சிகால பூஜைக்கு பக்தர்களை அனுமதிக்க கூடாது என்பது அரசு உத்தரவு.அந்த பூஜையில் கூட்டமாக ஒரே இடத்தில் பக்தர்கள் நின்று விடுவார்கள். சமூக இடைவெளியும் கடைப்பிடிக்க முடியாது என்பதால் பக்தர்கள் தரிசனம் முடிந்ததும் வெளியே அனுப்பி வைக்கிறோம்’ என்றார்.