×

ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் நீர்நிலைகள், வனங்களை ஆக்கிரமிக்கும் பாலிகானம்மோலே களை செடிகள்: ஆய்வு செய்து அகற்ற கோரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது கடந்த 1840களில் எரிபொருள் தேவைக்காக யூகலிப்டஸ் எனப்படும் கற்பூரம்,  வேட்டில் எனப்படும் சீகை, பைன் போன்ற வெளிநாட்டு மர வகைகளையும், லேண்டானா, கார்ஸ், செஸ்ட்ரம், ஸ்காட்ச்புரூம் உள்ளிட்ட பல்வேறு  வகையான வெளிநாட்டு அலங்கார தாவரங்கள் நடவு செய்யப்பட்டன. தற்போது இவை சுமார் 15 ஆயிரம் எக்ேடர் பரப்பளவில் வளர்ந்துள்ளன. இதனால், நீலகிரிக்கே உரித்தான தாவரங்கள் அழியத் துவங்கின. மேலும்,  காட்டின் வளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பல்லுயிர் பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை நிலத்தடி நீர்மட்டத்தையும், மழை  பொழிவையும் வெகுவாக பாதிக்கின்றன. மேலும் வெளிநாட்டு தாவரங்களின் ஆக்கிரமிப்பால் விலங்குகளின் வாழ்விடம் சுருங்கின. விலங்குகளுக்கு  உணவான புற்கள், செடி கொடிகள் வளர வழியில்லாமல் அழிந்தன. இதனால் தாவர உன்னிகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை  கருத்தில் கொண்டு 1990களுக்கு பின்பு அந்நிய தாவரங்கள் நீலகிரியில் நடவு செய்ய தடை விதிக்கப்பட்டு, நீலகிரிக்கே உரித்தான சோலை  மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்தது.

தற்போது நீலகிரி வனங்களை ஆக்கிரமித்துள்ள சீகை உள்ளிட்ட அந்நிய மரங்கள்  வனத்துறை மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இச்சூழலில் பாலிகானம் மோலே எனப்படும் இமாலயன் முடிச்சு செடிகள் அப்பர் நீலகிரி எனப்படும்  ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான கோடப்பமந்து, கோடப்பமந்து கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகள், காந்திநகர் பகுதியில் உள்ள ஓடை,  ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா பகுதி, ஆடாசோலை, புதுமந்து உள்ளிட்ட பல பகுதிகளில் வனங்கள் மற்றும் நீர்நிலைகள்,  சாலையோரங்களில் பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் வன வளம் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக தாவரவியலாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

காட்டுயிர் ஆய்வாளர் வசந்த் பாஸ்கோ கூறுகையில், ‘‘இமயமலையை தாயகமாக கொண்ட பாலிகானம் மோலே இமய மலை முடிச்சி செடி என  அழைக்கப்படுகிறது. அழகு தாவரமாக நீலகிரிக்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் இன்று வனவளத்தை கடுமையாக பாதிக்கும் அளவிற்கு பரவி  வருகிறது. கொத்தாக உள்ள பூக்களில் ஆயிரக்கணக்கான விதைகள் காற்றில் பரவுகிறது. நீர் நிலைகள், ஓடைகள், ஆறுகள் போன்றவற்றை  ஆக்கிரமித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றை உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. இவற்றை அகற்றுவது மிக கடினமான  பணி. வனத்துறை முறையாக ஆய்வு செய்து திட்டம் வகுத்து அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரும் பதிப்பு ஏற்படும்’’ என்றார்.


Tags : Water bodies ,removal ,inspection ,forests ,Ooty ,areas ,Ooty Polyconamole , surrounding , Ooty,water , forests,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகம்...