துபாய்: துபாயில் 19ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த மார்ச் 29ம் தேதி அன்று துவங்கவிருந்த ஐ.பி.எல்-ன் 13 வது பதிப்பு ஏப்ரல் 15ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டது, அதன் பின்னர் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து பி.சி.சி.ஐ அதை காலவரையின்றி ஒத்திவைத்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்கள் 20 ஓவர் உலகக் கோப்பையை ஒத்திவைத்த பின்னர் தான், ஐ.பி.எல் 2020-ன் தொடக்க மற்றும் இறுதி தேதிகளை இந்திய வாரியம் அறிவித்தது. இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தியது. ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு எமிரேட்சில் செப்டம்பர் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை நாளை வெளியிடப்பட உள்ளது. இதனை ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.