×

கொரோனா காலத்திலும் 63,633 நபர்களுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!!

சென்னை : கொரோனா காலத்திலும் விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாண்புமிகு அம்மாவின் அரசு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு  முழுவதும் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  அதே வேளையில், விபத்து மற்றும் அவசர கால சகிச்சைகள் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் அளித்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.  

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டுவரும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களில் மார்ச் 2020 முதல் இதுவரை 1,52,118 நபர்களுக்கு விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏற்பட்ட காயங்களுக்கு அவசரகால சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.  

இவர்களில் 63,633 நபர்களுக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.  இம்மையங்களில், விஷம் அருந்துதல் உள்ளிட்ட சுய தீங்கு ஏற்படுத்திக் கொண்ட 52,849 நபர்களுக்கு சிகிச்சைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பாம்பு கடித்த 19,947 நபர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும், 4,494 குழந்தைகளுக்கு அவசரகால உயிர்காக்கும் சிகிச்சைகளும், 4,432 நபர்களுக்கு மாரடைப்பிற்கான சிகிச்சைகள், 7,775 நபர்களுக்கு பக்கவாத நோய்க்கான சிகிச்சைகள் என மொத்தம் 2,41,615 நபர்களுக்கு அவசரகால சேவைகள் அளிக்கப்பட்டு விலை மதிப்பில்லாத உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மக்கள் நலன் காக்கும் பணிகள்  மூலம் கொரோனா வைரஸ் தொற்று காலத்திலும் தமிழக அரசின் தொய்வில்லா செயல்பாடு அனைவரின் கவனத்தையும் தொடர் பாராட்டினையும் பெற்றுவருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : surgeries ,Minister Vijayabaskar ,Corona , Corona, period, life-saving, surgeries, Minister Vijayabaskar
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...