×

அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 24(05.09.2020) மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  அடுத்த 48(06.09.2020) மணி நேரத்தில், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக உசிலம்பட்டியில் 13 செ.மீ மழையும், தேவலா, குப்பணம்பட்டி பகுதிகளில் தலா 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல், சிவகங்கை, ஒகேனக்கல், இடையப்பட்டி, கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் தலா 8 செ.மீ மழை பெய்துள்ளது. மேலும், பெரியகுளம், சின்னக்கல்லார், கொடநாடு பகுதிகளில் தலா 7 செ.மீ, வால்பாறை PAP, வால்பாறை வட்டார அலுவலகம், மாயனூர் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* செப்டம்பர் 5(இன்று) முதல் 9ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 5 முதல் 8ம் தேதி வரை, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 5 மற்றும் 6ம் தேதிகளில், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்திலும், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* செப்டம்பர் 6 மற்றும் 7ம் தேதிகளில், தெற்கு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 6, 8 மற்றும் 9ம் தேதிகளில், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
 
எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 06.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : districts ,Dindigul ,Madurai ,Theni ,Chennai Meteorological Center Heavy ,Chennai Meteorological Department , Atmospheric mantle circulation, convection, heavy rain, Chennai Meteorological Center
× RELATED அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில்...