×

வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை மீனவர்கள் அட்டூழியம்!

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரை தென்கிழக்கு நடுக்கடலில் ஆறுகாட்டுத்துறை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருடைய பைபர் படகில் கோபி, சுகுமாரன், வேலவன், காளிதாஸ் ஆகிய 4 பேரும் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டு படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் வீச்சருவாள், இரும்பு ராடு போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் கோபியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வேதாரண்யம் மீனவர்களைத் தாக்கி அவர்களின் வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, 20 லிட்டர் டீசல், ஜிபிஎஸ் கருவி, செல்போன்கள் ஆகியவற்றையும் பறித்து சென்றதாக தமிழக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Tags : fishermen ,Sri Lankan ,Mediterranean ,Tamil Nadu ,fishermen atrocity ,Vedaranyam ,Kodiyakkara ,Kodiakkarai , Vedaranyam, Kodiakkarai, Mediterranean, Tamil Nadu fishermen, attack, Sri Lankan fishermen
× RELATED இலங்கை சிறையிலிருந்து...