ஊத்துக்கோட்டை: சென்னை-திருப்பதி சாலையில் பெரியபாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு, 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள, ஆரணி ஆற்றின் கரை ஓரத்தில் புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். மேலும் சென்னை, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் ஆரணி ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை கடந்துதான் கோயிலுக்கு செல்லவேண்டும். இந்நிலையில், பெரியபாளையம் ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, கடந்த திமுக ஆட்சியில் 1999ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்கிடையில், இந்த பாலத்தின் அருகில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து மீன், கோழி போன்ற இறைச்சி கழிவுகளை பாலத்தின் கீழ் கொட்டுகிறார்கள். இதனால், துர்நாற்றம் வீசியது. இதனால் பாதசாரிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையறிந்த நெடுஞ்சாலை துறையினர் பாலத்தின் நடைபாதையை சுத்தம் செய்து சீரமைத்தனர்.