சென்னை: அயனாவரம் ரவுடி என்கவுன்டர் தொடர்பாக 6 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தெரிவித்துள்ளது. அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சங்கரை கடந்த மாதம் போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதில் சந்தேகம் உள்ளதாகவும், என்கவுன்டர் குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சங்கரின் தாயார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, ஏற்கனவே இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து சங்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், 6 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை வருகிற 8ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.