சென்னை: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் விவகாரத்தில் அமைச்சர் மாபா.பாண்டியராஜன், எம்எல்ஏ நட்ராஜ் ஆகியோருக்கு சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் முதற்கட்டமாக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான மாபா.பாண்டியராஜன் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் ஆகியோரிடம் கடந்த 27ம் தேதி காணொலி காட்சி மூலமாக சபாநாயகர் தனபால் விசாரணை மேற்கொண்டார். அப்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன் மனுதாரர் என்ற அடிப்படையில் பங்கேற்று இருந்தார்.
அப்போது, இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு தொடர்பாக எவ்விதமான கடிதமும் அரசு கொறடா ராஜேந்திரன் தங்களுக்கு அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, கடந்த 31ம் தேதி அரசு கொறடா ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் மாபா.பாண்டியராஜன், நட்ராஜ் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை செய்ய தன்னை அனுமதிக்க கோரி பார்த்திபன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவிக்க அமைச்சர் மாபா.பாண்டியராஜன் மற்றும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் ஆகியோருக்கு சபாநாயகர் தனபால் கடிதம் அனுப்பியுள்ளார்.