மும்பை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கம், அதை சுற்றியுள்ள இடத்தை பெரும்பகுதியை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(டிஎன்சிஏ) பயன்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியை மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்(எம்சிசி) வைத்துக் கொண்டுள்ளது. தான் பயன்படுத்தி வரும் இடத்திற்கான வாடகையாக டிஎன்சிஏ ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயை தமிழக அரசுக்கு செலுத்தி வந்தது. இந்நிலையில் வாடகை உயர்வு தொடர்பாக டிஎன்சிஏ, தமிழக அரசு இடையே பிரச்னை ஏற்பட்டது. அதனால் 13 ஆண்டுகளாக வாடகை செலுத்தப்படவில்லை. இந்நிலையில் இருதரப்பும் நடத்திய பேச்சு வார்த்தை காரணமாக உடன்பாடு ஏற்பட்டது.
உடன்பாட்டின்படி நிலுவை தொகை ரூ.19கோடியை கடந்த ஆண்டு செலுத்தப்பட்டது. கூடவே புதிய உடன்பாட்டின்படி ஆண்டுக்கு ரூ.3 கோடி வாடகை செலுத்தவும் டிஎன்சிஏ ஒப்புக் கொண்டது. அந்த தொகையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) செலுத்துகிறது. அதன்படி ஏப்ரல் 2020 முதல் ஏப்ரல் 2021ம் வரை ஓராண்டுக்கான வாடகையாக ரூ.3 கோடியை டிஎன்சிஏ சார்பில் மயிலாப்பூர் தாசில்தாருக்கு பிசிசிஐ செலுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி செலுத்திய இந்த தொகைக்கு ஜிஎஸ்டி வரியாக ரூ.54லட்சத்தை பிசிசிஐ செலுத்தி உள்ளது.
* இமாச்சல் அதிகம்
கொரோனா பரவல் காரணமாக விளையாட்டு உலகம் நெருக்கடியில் சிக்கியிருப்பதாக சொல்லப்படும் நிலையில் பிசிசிஐ ஜூலை மாதம் மட்டும் ரூ.48.89கோடியை துணை அமைப்புகளுக்கும், வரியாகவும் செலுத்தியுள்ளது. இந்த கணக்கு 25லட்ச ரூபாய்க்கு குறைவான செலவினங்கள் இந்த கணக்கில் வராது. இதில் அதிகபட்சமாக இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்கம் 16.20கோடியை தற்காலிக உதவியாக பெற்றுள்ளது. இப்படி ஜார்க்கண்ட் சங்கமும் ரூ.10.80 கோடி பெற்றுள்ளது. கூடவே ஜூன் மாத செலவினங்களுக்காக முன்கூட்டியே ரூ.3.52கோடி வருமான வரியாக பிசிசிஐ கட்டியுள்ளது.