×

சிக்கலில் சிஎஸ்கே: ரெய்னாவை தொடர்ந்து ஹர்பஜன் விலகல்

சென்னை: சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ‘தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில்(யுஏஇ)  இம்மாதம் 19ம் தேதி  தொடங்குகிறது.  இதில் பங்கேற்கும் அணிகள்  துபாய், ஷார்ஜா, அபுதாபியில் முகாமிட்டுள்ளன. முதல் அணியாக சிஎஸ்கே புறப்பட்டுச் சென்ற நிலையில், ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் செல்லவில்லை. அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் தாமதமாக யுஏஇ செல்வார் என்று கூறப்பட்டது.  இடையில், இந்த வார இறுதிக்குள் புறப்படுவார் என்றும் தகவல் வெளியானது.ஆனால் ‘தனிப்பட்ட காரணங்களுக்காக  தொடரில் இருந்து விலகுவதாக’ ஹர்பஜன் சிங் நேற்று அறிவித்துள்ளார். அது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ‘தனிப்பட்ட காரணங்களுக்காக ’ ரெய்னா அணியில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். இப்போது ஹர்பஜன்சிங்கும் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை  ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே  சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் மற்ற அணிகள் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில்,  சிஎஸ்கே பயிற்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இப்படி சிஎஸ்கே தொடர் பிரச்னையில் சிக்கியுள்ளது  அதன் ரசிகர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

Tags : Harbhajan ,Raina ,CSK , CSK, Raina, Harbhajan, Dissociation
× RELATED சி.எஸ்.கே – ஆர்.சி.பி. கிரிக்கெட்...