×

திருப்பூர் தென்னம்பாளையத்தில் சேறும், சகதியுமான மார்க்கெட்: தார்சாலை அமைக்க வலியுறுத்தல்

திருப்பூர்: திருப்பூர், தென்னம்பாளையம் மார்க்கெட்டு சேறும், சகதியுமாக இருப்பதினால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர், பல்லடம் மெயின் ரோட்டில் தென்னம்பாளையம் பகுதியில் தினசரி மொத்த காய்கறி மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. திருப்பூர் சுற்றியுள்ள பகுதிகளான செட்டிபாளையம், வாவிபாளையம், நெருப்பெரிச்சல், மங்கலம், அருள்புரம், மண்ணரை, புதூர், அவிநாசி  உட்பட பல்வேறு கிராமங்களிலிருந்து காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். ஊட்டி காய்கறிகள் மட்டும் தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் சந்தைக்கு வருகிறது. வடமாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயம் தினசரி 15 லாரிகள் முதல் 20 லாரிகளிலும், தூத்துக்குடியிலிருந்து கடல் மீன்கள் தினமும்  குறைந்தபட்சம் 10 லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டதால் லாரிகளின் வருகை குறைந்து விட்டது.  

தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு நாள்தோறும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், பொதுமக்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். வியாபாரிகள் இங்கு காய்கறிகள், மீன்கள் வாங்கி தாங்கள் வைத்துள்ள கடைகளில் சில்லரை விலையில் விற்பனை செய்கின்றனர். தினமும் பல கோடி ரூபாய் பழக்கத்தில் உள்ள மொத்த மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு தேவையான  அடிப்படை பிரச்னைகளை நிவர்த்தி செய்ய மாநகராட்சி  நிர்வாகம் முன்வரவில்லை.
மாநகராட்சிக்கு ஆண்டு குத்தகையாக ரூ.50 லட்சத்துக்கு மேல் வருவாய் கிடைத்தும் முறையான அடிப்படை வசதிகள் இல்லை. கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருவதால் காய்கறி கழிவுகள், மீன் கழிவுகள் ஆகியவை மழை நீரில் நனைந்தும், அழுகியும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

சிறு தரைக்கடை வியாபாரிகள் சிமென்ட் தளம் இல்லாததால்  மண் தரையில் சாக்கு விரித்து வி்ற்பனை செய்யும் காய்கறி வியாபாரிகள் இரு நாட்களாக பெய்த மழையால் வியாபாரம் தடைபட்டுள்ளது. மண் தரை முழுவதும் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.  சந்தைவளாகம் முழுவதும் மேடு,பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் சமமாக நிறுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறியதாவது. திருப்பூர், மாநகராட்சிக்கு வாடகையாக பல லட்சம் செலுத்தி வருகிறோம். முறையாக கழிவு நீர் செல்ல சாக்கடை இல்லை. மழை பெய்தாலோ, கழிவுநீர் அதிகமாக தேங்கி நின்றால் சேறும், சகதியுமாக உள்ளது. மொத்த மார்க்கெட் முழுவதும் மண் கொட்டி சமப்படுத்தி தார் ரோடு போட வேண்டும். தென்னம்பாளையம் மார்க்கெட்டின் அவல நிலையை பார்த்து வளாகம் முழுவதும் தார் ரோடு அமைக்க மாநகராட்சியும், மாவட்ட  நிர்வாகம் ஆகியவை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

காங்கயத்திலும் சந்தை நிலை மோசம்
காங்கயம் பழையகோட்டை ரோட்டில் 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு தற்காலிக சந்தை செயல்பட்டு வந்தது. கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்தது. சுமார் 158 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் பழையகோட்டை ரோட்டில் அமைந்துள்ள சந்தையில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது. சாக்கடை நீர் வந்துள்ளாதல் துர்நாற்றம் வருகிறது. இதன் காரணமாக, அந்த மைதானத்தில் சந்தை செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  நகராட்சி நிர்வாகம் சார்பில் சந்தை அமைந்துள்ள பகுதியில் கிருமி நாசினி மருந்து தெளித்து, சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirupur Thennampalayam ,Tirupur Thennampalayam Muddy , Tirupur Thennampalayam, Muddy, muddy ,market,
× RELATED திருப்பூர் மாநகராட்சியில் ரூ.39.73...