கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண்கள் உட்பட 9 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தில் வெடிமருந்து கிடங்கு ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் பெண்கள் பலர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் திடீரென வெடிமருந்து கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு வெடிமருந்து வெடித்து சிதறியது. இதில் அந்த வெடிமருந்து கிடங்கு தரைமட்டமானது. கிடங்கில் பணியாற்றிய 9 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
விபத்து ஏற்பட்ட இடத்தில் மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுளதாகவும் மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து நடந்த இடத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளுக்கு இடையில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் விரைந்துள்ளார். தொடர்ந்து, மீட்புப்பணியில் தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து நடந்த இடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தப்படும் பட்டாசு தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.