×

மின்வயர்கள் உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு 3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரி கிராமத்தில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பற்றி எரிந்து நாசமானது. இதில், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாயின. உத்திரமேரூர் அடுத்த காவனூர்புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் காசி (58), பிரபாகரன் (38), மாரி (60), கூலி தொழிலாளிகள். அடுத்தடுத்து குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ளவீடுகளின் மேல்பகுதியில், மும்முனை மின்வயர் தாழ்வாக செல்கிறது. இதனை அப்புறப்படுத்தி, மாற்றுபாதையில் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் நேற்று மதியம் திடீரென பலத்த காற்று வீசயது. இதனால் மின்வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி ஏற்பட்டு, அங்குள்ள ஒரு குடிசை மீது விழுந்தது. இதில் குடிசை தீப்பற்றி எரிந்தது. இதை கண்டதும், அப்பகுதி மக்கள், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. காற்று வேகமாக வீசியதால், அருகில் உள்ள குடிசைகளுக்கும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து உத்திரமேரூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் வந்து, தீயை அணைத்தனர். அதற்குள் காசி, பிரபாகரன், மாரி ஆகியோரது குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து, அதில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலானது. புகாரின்படி, உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : cottages , Electrical wiring, spark, 3 cottages, burning ash
× RELATED தீப்பிடித்து வீடு சேதம்...