சென்னை: மந்தைவெளி 2வது டிரஸ்ட் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (68). ஓய்வுபற்ற அரசு ஊழியரான இவர், பட்டினப்பாக்கம் லீத் கோஸ்ட் ரோடு வடக்கு தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார். வழக்கம் போல் குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு காவல் பணியில் இருந்த சிவப்பிரகாசம் நள்ளிரவு 11.40 மணியளவில் பார்க்கிங் பகுதியில் கார் ஏறிய நிலையில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் பட்டினப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், விபத்து ஏற்படுத்தியது அதே குடியிருப்பில் வசித்து வரும் நடிகர் கிட்டு (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகள் அபர்ணா (18) என்பவரின் சொகுசு கார் என்று தெரியவந்தது. ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் மகள் நேற்று முன்தினம் வீட்டை விட்டு தான் வெளியில் எங்கும் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார். அதைதொடர்ந்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரியல் எஸ்டேட் அதிபர் பழனியப்பன் என்பவரின் மகள் அபர்ணா விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. அதைதொடர்ந்து தொழிலதிபர் மகள் அப்ரணா மீது 304(ஏ) மற்றும் அதிவேகமாக வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.