×

டிசம்பர் வரை அலட்சியமா இருக்காதீங்க... 2,00,000ல் ஒருவராக வேண்டாமே... உஷார்! மறக்காதீங்க மாஸ்க், சமூக இடைவெளி, சானிடைசர்

புதுடெல்லி: எல்லாம் தளர்த்தப்பட்டு விட்டன என்பதால் அலட்சியம் வேண்டாம்; டிசம்பர் வரை விபரீதம் நம்மை சுற்றித்தான் இருக்கிறது. 2 லட்சம் பேரில் நீங்கள் ஒருவராக இருக்க வேண்டாமே...ஆம், மாஸ்க், சமூக இடைவெளி, சானிடைசர் மூலம் சுகாதாரமாக இருப்பது... மறக்கவே கூடாது. அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சுகாதார மதிப்பீடு குறித்த ஆராய்ச்சி மையம் உள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு, இறப்பு குறித்து அவ்வப்போது தீவிரமாக ஆய்வு செய்து ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.

கடந்த 1 ம் தேதி இந்த மையம் இந்தியாவின் நிலை குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னமும் குறைந்து விடவில்லை. ஆனால், அரசு, சுகாதார அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள், பொதுமக்கள் விழிப்புணர்வு, பாதுகாப்பு உணர்வு காரணமாக இதுவரை பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. இதே நிலை நீடித்தால்  பெரிய ஆபத்தில் இருந்து இந்தியா தப்பி விடும். ஆனால், தளர்வுகள் நீக்கப்பட்டு விட்டதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இனி மக்கள் கையில் தான் எல்லாம் உள்ளது. அரசு சொன்னபடி, முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து தான் பொது இடங்களில் மக்கள் நடமாட வேண்டும். சானிடைசர், சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வதை மறக்க கூடாது. இதை செய்தால் மட்டுமே மக்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்று கூறியுள்ளது.  மேலும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலை நீடிக்காமல், மக்கள்  அலட்சியமாக இருந்தால் டிசம்பர் 1 ம் தேதிக்குள் 2 லட்சம் பேர் வரை இறக்கும் ஆபத்து உள்ளது; புதிதாக 60 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை கணிப்பை வெளியிட்டுள்ளது.

* 3 மாதம் ஜாக்கிரதை
வாஷிங்டன் மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் முர்ரே கூறுகையில், நாங்கள் எப்போதும் சரியான கணிப்பை தான் கூறி வருகிறோம். இந்தியா எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து அவ்வப்போது கூறியுள்ளோம். பொது ஊரடங்கு காரணமாக மக்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். ஆனால், இனி ஊரடங்கு இல்லை; மக்கள் கையில் தான் எல்லாம் உள்ளது. இன்னமும் 3 மாதம் மட்டும் எச்சரிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடித்து, சானிடைசர் பயன்படுத்தி வந்தாலே போதும் பாதிப்பை தடுக்கலாம். ஏதாவது நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் கண்டிப்பாக 3 மாதம் மிக ஜாக்கிரதையாக இருப்பது முக்கியம்’ என்றார்.

* கணிப்பு எச்சரிக்கை தான்
வாஷிங்டன் மையத்தின் கணிப்பு ஆய்வு அறிக்கை பற்றி அரியானா மாநிலம் அசோகா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கவுதம்  மேனன் கூறுகையில்,‘ வாஷிங்டன் மையத்தின் கணிப்பு சரியாக இருக்கும்.ஆனால், இந்தியா இதுவரை எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இறப்பு, பாதிப்பு மிகவும் குறைவாக இருந்துள்ளது. இதே நிலை கண்டிப்பாக நீடிக்கும்.  ஆனால், மக்களும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது’ என்று தெரிவித்தார்.


Tags : one ,Usher ,break ,sanitizer , Until December, do not be indifferent, do not be one of the 2,00,000, Ushar! Unforgettable mask, social break, sanitizer
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...