சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ்குமாரை தற்கொலைக்கு தூண்டிய அவரது நண்பர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞராக ராஜேஷ்குமார் பணிபுரிந்திருக்குகிறார். இந்நிலையில் மறைமலைநகரில் வசித்து வந்த ராஜேஷ்குமார், நேற்று மாலை திருவொற்றியூரில் உள்ள அவரது தந்தை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக சாத்தாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ராஜேஷ்குமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அதாவது அந்த கடிதத்தில், நண்பர்களான செல்வதுரை மற்றும் ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும் அரசு வேலை வாங்கித் தருவதாக பலகோடி பேரிடம் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்ததாகவும், அதற்கு தனது பெயரை பயன்படுத்தி வசூல் செய்ததால், பணம் பெற்றுக்கொண்டவர்கள் வேலை கிடைக்காமல் தன்னிடம் வந்து தகராறு செய்ததாகவும் ராஜேஷ்குமார் குறிப்பிட்டுள்ளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், தான் தற்கொலை செய்துகொண்டதாகவும், மேலும் தனது தற்கொலைக்கு காரணம் தனது நண்பர்களான செல்வதுரை மற்றும் ஞானப்பிரகாசம் ஆகிய இருவரும்தான் என தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து சாத்தாங்காடு போலீசார் தற்கொலை வழக்காக மட்டுமே பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது கடிதத்தின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு மாற்றப்பட்டு செல்வதுரையை சாத்தாங்காடு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் பணத்தை ஏமாந்தவர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் போலீசாரின் வருகையை அறிந்து தலைமறைவான ஞானப்பிரகாசத்தை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.