×

1 முதல் 19 வயது உள்ளவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை 3 கட்டங்களாக வினியோகம்: வரும் 14ம் தேதி தொடங்குகிறது

வேலூர்:  ஒன்று முதல் 19 வயது வரை உள்ள மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை 3 கட்டங்களாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தேசிய குடற்புழு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயது குழந்தைகளுக்கும், அரசு பள்ளிகள், நிதியுதவி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 19 வயது உள்ள அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கன்வாடி, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆகஸ்ட் மாதம் வழங்க வேண்டிய குடற்புழு மாத்திரை வழங்கப்படவில்லை. செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் வழங்கி முடிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில் தமிழகம் முழுவதும் குடற்புழு மாத்திரைகளை 3 கட்டங்களாக வழங்க சுகாதாரத்துறை மூலம் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு வரும் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 14ம்தேதி முதல் 19ம் தேதி வரையும், 2வது கட்டமாக 21ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், விடுபட்டவர்களுக்கு 28ம் தேதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கன்வாடி, அரசு மற்றும் நிதியுதவி, தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த பணியில் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்களும் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் அருகே அழைத்து மாத்திரை வழங்கப்படும்.இந்த மாத்திரை மூலம் குடல் புழுக்களை கட்டுப்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்தல், மன அழுத்தம், இரும்புச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு நோய்கள் வரும் முன்பே தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த மாத்திரை 400 மில்லி கிராம் கொண்டது. பள்ளிகள், வீடுகள் தோறும் நேரடியாக கிராம செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் ஈடுகின்றனர். கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து இந்த பணி நடைபெறும். இந்த மாத்திரை சாப்பிடுவதால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதை கண்டிப்பாக மாணவ, மாணவிகள் உட்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Delivery , Deworming ,tablet ,phases, 14th
× RELATED புனேவில் ரூ.1,100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்