×

சாத்தான்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகர் வீட்டு முன்பு மர்ம பொருள் வீச்சு: எஸ்பி நேரில் ஆய்வு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே இந்து முன்னணி பிரமுகர் வீட்டு முன்பு  நேற்று அதிகாலை மர்ம பொருள் வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பன்னம்பாறையை சேர்ந்தவர் துரை (44). பால் வியாபாரியான இவர், சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி செயற்குழு உறுப்பினராகபொறுப்பு வகித்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வழக்கம் போல் பால் வியாபாரத்திற்கு செல்ல முயன்றார். அப்போது வீட்டின் முன்பு மர்ம பொருள் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உருண்டையாக இருந்த அதில் நூல் மற்றும் திரி சுற்றப்பட்டு காணப்பட்டதால் அது வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து அவர் உடனடியாக போலீசார் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

சாத்தான்குளம் டிஎஸ்பி கிளாட்வின் ஜெகதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் பெர்னாட் சேவியர் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதுபோல் இந்து முன்னணி நெல்லை கோட்ட செயலாளர் சக்திவேலன், மாவட்ட செயலாளர் முத்துசுந்தரம்  மற்றும் நிர்வாகிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். போலீசார் மர்மபொருளை பாதுகாப்பாக மீட்டு காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். பின்னர் நெல்லை, தூத்துக்குடியில் இருந்து வெடிகுண்டு தடுப்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் முன்னிலையில் மர்ம பொருளை போலீசார் குடியிருப்புக்கு பின்புறம் கொண்டு சென்று சோதனை நடத்தினர். இதில் அந்த மர்ம பொருள் வெடிபொருள் இல்லையென தெரியவந்தது. சோதனையில் காய்ந்த தோங்காயில் நூல் சுற்றி திரி போல் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், ‘இது வெடி குண்டு அல்ல. சாதாரண காய்ந்த தேங்காய் தான். இதுகுறித்து பயம் கொள்ள வேண்டாம். துரைக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் மர்ம நபர்கள் யாரோ இதனை போட்டிருக்கலாம். இதுகுறித்து சந்தேகப்படும் நபர்கள் இருந்தால் புகார் தெரிவிக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.


Tags : SP ,house ,interview ,Sathankulam ,home ,Sathankulam Hindu ,Front , Sathankulam, Hindu, Front, range , SP ,review
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்