டெல்லி : மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிக்காய் விதைகளை பல்வேறு மாநிலங்களில் சோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது மீண்டும் சர்ச்சைகளை வித்திட்டுள்ளது. 2020 மற்றும் 2023 ஆண்டுகள் காலக்கட்டத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட 2 வகை கத்திரிக்காய் விதைகளை 8 மாநிலங்களில் சோதனை செய்வதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகம், கர்நாடகா, பீகார், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பி.டி.கத்திரிக்காய்களை பரிசோதனை செய்ய மத்திய அரசும் மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு அனுமதி வழங்கி உள்ளது.
ஜனக் மற்றும் பிஎஸ்எஸ் -793 என்று பெயரிடப்பட்ட இந்த மரபணு மாற்றப்பட்ட கத்திரி விதைகளை ஐசிஏஆர் எனப்படும் வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலம் என்ஆர்சிபிவி எனப்படும் தாவர உயிரி தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையமும் இணைந்து உருவாககியுள்ளன.இருப்பினும் மாநில அரசுகளின் உரிய அனுமதியைப் பெற்ற பிறகே பி.டி. கத்திரி விதைகளை களப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு தெரிவித்துள்ளது.
பரிசோதனையில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை மாநில பல்லுயிர் வாரியங்கள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து பல்லுயிர் மேலாண்மை குழுக்களுடன் பகிர வேண்டும் என்றும் குழுவின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பே மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்திரிகாய்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.டி. கத்திரி விதைகளை மீண்டும் களப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளிப்பதற்கு விவசாயிகள் சமூகத்தினர் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.