சென்னை: சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது தந்தை கலியபெருமாள் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் கே.கனகவள்ளி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் ஆயுர்வேத மருத்துவ முறை பின்பற்றப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2010ல் சென்னையில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைக்கப்பட்டது.
தற்போது சித்த மருத்துவத்துக்கு புதுடெல்லி, திருப்பதி, பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய ஆராய்ச்சி பிரிவுகள் தொடங்கப்பட்டுளது. ஆயுஷ் அமைச்சகம் கொரோனா ஆராய்ச்சிக்காக இந்திய மருத்துவ துறை பிரிவுகளான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய துறைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. அறிக்கையை படித்துப்பார்த்த நீதிபதிகள், சித்த மருத்துவ இணை மருந்து கட்டுப்பாட்டாளர் பதவிக்கு சித்த மருத்துவத்திலேயே தகுதியான நபர்கள் உள்ளபோது ஆயுர்வேதம் படித்த நபரை நியமித்தது ஏன் என்பது குறித்தும், சித்த மருத்துவ இணை இயக்குனர் பதவியை கலைத்தது ஏன் என்பது குறித்தும் மத்திய அரசு விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.