டெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது தற்போதைய உடனடி தேவை என்று மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மொஹாலி மற்றும் ரேபரேலியின் செயல்பாடுகளைப் பற்றிய ஆய்வுக் கூட்டம் ஒன்றை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மற்றும் மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா ஆகியோர் காணொலி காட்சி மூலம் நடத்தினர்.
கூட்டத்தில் பேசிய சதானந்த கவுடா வரவிருக்கும் மொத்த மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் வளர்ச்சியில் தேசிய மருந்துகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றார். காசநோய், மலேரியா, புற்று நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளிட்டவற்றுக்கு மருந்துகள் கண்டறியப்படுவது அவசியம் என்று அவர் கூறினார். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு பரிசோதனை, ஆலோசனை மற்றும் இதர சேவைகள் மூலம் ஆதரவளிப்பது தற்போதைய தேவை என்று சதானந்த கவுடா கூறினார்.